நம்மிடம் கொஞ்சம் பணம் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். இருக்கின்ற பணத்தை எந்த முதலீட்டுத் திட்டத்தில் எப்போது முதலீடு செய்யலாம்?
அப்படி முதலீடு செய்தால் என்ன லாபம் கிடைக்கும்?முதலீட்டுத் திட்டத்தில் ஏதேனும் ஆபத்து இருக்கிறதா? -இப்படி கையில் இருக்கும் பணத்தை முதலீடு செய்வதற்கு முன்பு ஆயிரம் கேள்விகள் நம் மனதில் எழும்.
நம்முடைய அனைத்து சந்தேகங்களையும் போக்கி சரியான இடத்தில் முதலீடு செய்ய வழிகாட்டுபவர் தான் நிதி ஆலோசகர். இன்றைய தேதிக்கு நிதி ஆலோசகர் வேலைக்கு அதிக மதிப்பு இருக்கிறது. அதனால் நிதி ஆலோசகராக ஆக செய்யவேண்டிய வழிமுறைகளைப் பார்க்கலாமா!
நிதி ஆலோசகராக பணிபுரிவதற்கு கல்வித் தகுதிகள் இருக்கின்றன. நிதி, கணக்குப்பதிவியல், தொழில் மேலாண்மை, வர்த்தகம், பொருளாதாரம், வங்கி மேலாண்மை, காப்பீடு போன்ற ஏதேனும் ஒரு பிரிவில் முதுகலைப் பட்டம் அல்லது முதுகலை பட்டயப் படிப்பு பெற்றிருக்க வேண்டும். இவர்கள் ’சேலஞ்ச்’ என்ற முறையின்கீழ் சேர்க்கப்படுவர்.
ரெகுலர் என்ற முறையின்கீழ் சேருவோர் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. பின்னர் 4 தாள்களை (தேர்வுகளை) அவர்கள் வெற்றிகரமாக எழுதிக்கடக்க வேண்டும். பின்னர் 5 ஆவது தேர்வான இறுதித்தேர்வை எழுதலாம். ஆனால் சேலஞ்ச் முறையில் சேர்க்கை பெற்றவர்கள் நேரடியாக 5 வது தேர்வை எழுதிவிடலாம்.
“தி செக்யூரிட்டீஸ் அன்ட் எக்சேஞ்ச் போர்ட் ஆப் இந்தியா” (THE SECURITIES AND EXCHANGE BOARD OF INDIA) என்கிற அமைப்புதான் நிதி ஆலோசகர் வேலைக்கான அதிகாரப்பூர்வ அனுமதியை வழங்குகிறது.
நீங்கள் நிதி ஆலோசகராக இயங்க விரும்பினால் அதற்கு முதலில் அரசின் பதிவுபெற்ற சான்றிதழைப் பெறவேண்டும்.இந்த சான்றிதழை எப்படிப் பெறவேண்டும் என்று கேட்கிறீர்களா? இந்தச் சான்றிதழை நீங்கள் பெற விரும்பினால் அதற்கு முதலில் நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் செக்யூரிட்டீஸ் மார்க்கெட் (NATIONAL INSTITUTE OF SECURITIES MARKET – NISM நடத்தும் மியூச்சுவல் பண்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் சர்ட்டிபிகேஷன் எக்ஸாமினேஷன்(MUTUAL FUND DISTRIBUTORS CERTIFICATION EXAMINATION) தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
இந்தத் தேர்வுக்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து குறிப்பிட்ட தொகையை தி செக்யூரிட்டீஸ் அண்ட் எக்சேஞ்ச் போர்ட் ஆப் இந்தியா (THE SECURITIES AND EXCHANGE BOARD OF INDIA) என்கிற பெயரில் டிமாண்ட் டிராப்ட்டாக எடுத்து அனுப்ப வேண்டும். இந்தத் தேர்வில் தேர்ச்சி அடைந்தால் “தி செக்யூரிட்டீஸ் அன்ட் எக்சேஞ்ச் போர்ட் ஆப் இந்தியா” (THE SECURITIES AND EXCHANGE BOARD OF INDIA) அதற்கான பதிவுச் சான்றிதழை நம்மிடம் வழங்கும்.
அதன்பிறகு “தி செக்யூரிட்டீஸ் அன்ட் எக்சேஞ்ச் போர்ட் ஆப் இந்தியா” வுக்கு குறிப்பிட்ட ஒரு தொகையை பதிவுக்கட்டணமாக செலுத்த வேண்டும். பிறகு நாம் அரசின் பதிவு பெற்ற அதிகாரப்பூர்வ நிதி ஆலோசகராகப் பணிபுரிய ஆரம்பிக்கலாம்.
-பாலாஜி.