உலகம் எப்படிப் போனால் நமக்கென்ன? நம்முடைய வேலை நடந்தால் சரி என்கிற மனோபாவம் பொதுப்புத்தியில் அதிகமாகிக் கொண்டிருக்கிறது.
ஆனாலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக சமூக அக்கறையுள்ள நிகழ்வுகள் அரங்கேறிக்கொண்டுதான் இருக்கின்றன. அதனால்தான் உலகம் இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது.
அப்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் பிரைட்(PRIDE) என்கிற பெயரில் இயங்கிக்கொண்டிருக்கும் ரோட்டரி சங்கம் குழந்தைகளின் கல்வி சார்ந்த அற்புதமான ஒரு பணியைச் செய்துகொண்டிருக்கிறது.
அதனைக் கேள்விப்பட்ட அனைவரும் “அடடா, இது உண்மையிலேயே முக்கியமான பணிதான்” என்று சொல்லி வாழ்த்துகின்றனராம்.
அப்படி என்ன அற்புதமான பணி அது என்று கேட்கிறீர்களா? அதை நான் சொல்வதைவிட திருவண்ணாமலை மாவட்ட ரோட்டரி சங்கத்தைச் சேர்ந்த அ.சுபேர் அஹமத் பேசுவதுதான் சரியாக இருக்கும். அவருடன் முனைவு.காம் உரையாடியது. அதிலிருந்து கொஞ்சம்….
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த சுபேர் அஹமத் அடிப்படையில் ஒரு தொழில்முனைவோர். இரும்பு தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.
இவரைப்போலவே திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த முப்பத்தைந்து வயதுக்கு உட்பட்ட இளம் தொழில்முனைவோர் பலர் இந்த ரோட்டரி கிளப்பில் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.
’தொழில்முனைவோர் என்றால் பெருமைக்காக ஏதாவது ஒரு கிளப் அதாவது சங்கத்தில் உறுப்பினராக இருக்கவேண்டும்;
மற்றபடி நம் வேலையை நாம் பார்த்தால்போதும்’ என்று நினைக்காமல் கழிப்பறை பயன்பாட்டின் அவசியம், மரம் வளர்ப்பு, சுற்றுச் சூழல் பாதுகாப்பு போன்றவை சார்ந்த சமூகப் பணிகளில் இந்தத் தொழில்முனைவோர் ஆர்வம் காட்டிவருகின்றனர்.
அதன்பிறகு கொஞ்சம் கொஞ்சமாக திருவண்ணாமலை மாவட்ட அரசுப்பள்ளிகளின் மேலும் கவனம் வைக்க ஆரம்பித்தனர்.
“பொதுவாகவே திருவண்ணாமலை மாவட்டம் கல்வியில் மிகவும் பின்தங்கிய ஒன்று. அங்கொன்றும் இங்கொன்றுமாக தனியார் பள்ளிகளைச் சேர்ந்த பிள்ளைகள் பொதுத்தேர்வுகளில் சாதனை புரிகின்றனர்.
அதே நேரத்தில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் பத்து, பதினொன்று, மற்றும் பன்னிரண்டாம் வகுப்பைச் சேர்ந்த சுமார் இருபத்தைந்தாயிரம் பிள்ளைகள் தேர்வுகளில் சறுக்கி இருக்கின்றனர்.
இதன் அடிப்படையைக் கொஞ்சம் ஆராய்ந்து பார்த்தால் கிடைத்த விடை திகைக்க வைப்பதாக இருந்திருக்கிறது.
ஆங்கிலம், கணக்கு ஆகிய இந்த இரண்டு பாடங்களைத் தவிர தமிழ், அறிவியல், சமூக அறிவியல் என்று மற்ற எல்லாப் பாடங்களையும் அரசுப் பள்ளியில் படிக்கும் குழந்தைகள் தாய்மொழி வாயிலாகவே எழுதுகின்றனர்.
இதில் வருத்தமான செய்தி என்னவென்றால் அரசுப் பள்ளியில் படிக்கும் பெரும்பாலான குழந்தைகளுக்கு தாய்மொழியான தமிழை சரியாக எழுதப் படிக்கத் தெரிவதில்லை. க,ஞ,ச,ள,ல, ழ ஆகிய எழுத்துக்களுக்கு இடையிலான வேறுபாடும் அவர்களுக்குத் தெரிவதில்லை.
இப்படி தமிழை சரியாக எழுதப் படிக்கத் தெரியாததால் அவர்களால் தேர்வை சரியாக எழுத முடியாமல் போய்விடுகிறது. விளைவு? தேர்வுகளில் தேர்ச்சி பெறத் தவறிவிடுகின்றனர்.
இந்தப் பிரச்னையை சரிசெய்யத்தான் நாங்கள் நான்கு மாதத்திற்கு முன்பு களத்தில் இறங்கினோம்.
இதற்கு திருவண்ணாமலை மாவட்டப் பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகிய இருவரும் மிகவும் உறுதுணையாக இருந்தனர்” என்கிறார் சுபேர் அஹமத்.
“நம் தாய்மொழியைக் குழந்தைகள் சரியாகக் கையாள வேண்டுமெனில் மொழி குறித்த அறிவு, விழிப்புணர்வு ஆகிய இரண்டும் குழந்தைகளுக்கு வரவேண்டும் என்று நினைத்தோம்.
ஆகவே, தமிழ்மொழியைக் கற்றுக் கொடுக்க ஜெயராமன், கனகலட்சுமி ஆகிய இரண்டு தமிழாசிரியர்களைக் களத்தில் இறக்கினோம்.
எப்படி ஆங்கில எழுத்தான ’A’-வை சாய் கோடு (slanting line), படுக்கை வசமான (அ) கிடைமட்டக் கோடு (sleeping line) என்று பிரித்து சொல்லிக்கொடுக்க முடியுமோ, அதேபோல தமிழ் எழுத்துக்களை மேல் கீற்று, கீழ் கீற்று, சுழி என்று பிரித்துச் சொல்லிக்கொடுப்பதில் கனகலட்சுமி நிபுணத்துவம் பெற்றவர்.
இந்த இரண்டு ஆசிரியர்களையும் கொண்டு திருவண்ணாமலை மாவட்ட அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு எப்படி தமிழை குழந்தைகளுக்கு எளிமையாகக் கற்றுக்கொடுக்க வேண்டும் என்பது குறித்த ஒருவாரப் பயிற்சி வகுப்புகளை நடத்தினோம.” என்கிறார் அஹமத்.
பயிற்சி எடுத்துக்கொண்ட அரசுப்பள்ளி ஆசிரியர்கள் அதன்பிறகு அரசுப் பள்ளிப் பிள்ளைகளுக்கு தமிழைக் கற்றுக்கொடுக்க ஆரம்பித்திருந்தனர்.
அதுவும் எப்படி? குழந்தைகளின் கற்கும் திறனை அடிப்படையாகக் கொண்டு அவர்களை A,B,C,D என்று ஒவ்வொரு பிரிவாகப் பிரித்தோம். அந்தந்த பிரிவுகளுக்கு என்று தனித்தனியாக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.
இதில் “A” பிரிவில் வருபவர்கள் மிகத் திறமையான மாணவர்கள். ”B” பிரிவில் வருபவர்கள் திறமையான மாணவர்கள். “C” பிரிவில் வருபவர்கள் சராசரி மாணவர்கள். “D” பிரிவில் வருபவர்கள் கற்கும் திறன் குறைந்தவர்கள்.
இம்மாவட்டத்தில் கற்கும் திறன் குறைந்த அரசுப்பள்ளி மாணவர்கள் 24,000 பேர். இவர்களில் 24 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற வீதத்தில் மொத்தம் 1000 ஆசிரியர்கள் 10 நாட்கள் தமிழ்ப் பயிற்சி அளித்திருக்கின்றனர்.
அதுமட்டுமல்ல, இந்த முயற்சியில் தனியார் பள்ளிகளும் கல்லூரிகளும் கை கோர்த்ததுதான் குறிப்பிடத்தக்க திருப்புமுனை.
அரசுப்பள்ளி மாணவர்களுக்கான தமிழ்ப் பயிற்சி வகுப்புகள் தனியார் பள்ளி மற்றும் கல்லூரியில் நடந்தேறின. மாணவர்கள் அங்கேயே தங்கிப் பயிற்சியை மேற்கொண்டனர்.
“அவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் பல வசதிகளை எங்களுடைய ரோட்டரி சங்கம் ஏற்பாடு செய்தது” என்று கூறி வியக்க வைக்கிறார் சுபேர் அஹமத்.
“இந்தப் பயிற்சியின் மூலமாக 80% அரசுப்பள்ளி மாணவர்கள் தமிழை சிறப்பாகக் கற்றறிந்திருக்கின்றனர். அதுமட்டுமல்ல, இதை உலக சாதனையாக்கும் முயற்சியிலும் திருவண்ணாமலை ரோட்டரி சங்கம் ஈடுபட்டிருக்கிறது.
புதியதலைமுறை-கல்வி இதழானது பிரத்யேகமாக கல்வி சார்ந்த பத்திரிக்கை ஒன்றைத் தயாரித்திருக்கிறது.
அதனை ஏப்ரல் 19 ஆம் நாள் திருவண்ணாமலை மாவட்டத்தில் இருக்கும் 2177 பள்ளிகளைச் சேர்ந்த சுமார் ஒரு லட்சத்து எழுபதாயிரம் அரசுப் பள்ளிப் பிள்ளைகள் வாசித்துக் காட்டப் போகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 470 பள்ளிகளில் இந்தச் சாதனை நிகழ இருக்கிறது.
“திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 5000 ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்களும் இந்த சாதனை முயற்சிக்கு உறுதுணையாக இருக்கிறார்கள்” என்கிறார் சுபேர் அஹமத்.
இந்த சாதனை முயற்சி, விரைவில் லிம்கா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் (LIMCA BOOK OF RECORDS) உள்ளிட்ட ஏழு சாதனைப் புத்தகங்களில் இடம் பெறப் போகிறதாம்.
அதுமட்டுமல்ல, திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் இந்தக் கல்வி விழிப்புணர்வை தமிழகத்தின் மற்ற மாவட்டங்களுக்கும் கொண்டு செல்ல தங்களது திருவண்ணாமலை ரோட்டரி சங்கம் ஆர்வமுடன் இருப்பதாகக்கூறுகிறது பிரைட் ரோட்டரி சங்கம்.
நம்மை நிறைவாக வாழவைக்கும் சமூகத்துக்கு நல்லனவற்றை திரும்பச் செலுத்துவது தொழில் முனைவோரின் கடமை.
கனவு மெய்ப்படட்டும்!
-சு.கவிதா.