தொழிலில் ஜெயிக்க வேண்டியது அவசியம்தான். ஆனால், அதற்காக குடும்பத்தை இழந்துவிடக் கூடாது.கொஞ்சம் புத்திசாலித்தனமாக செயல்பட்டால்,,குடும்பம், தொழில் இரண்டையும்,மிக அழகாக சமப்படுத்திக்கொள்ளலாம். இதோ அப்படி செய்ய உதவும் யோசனைகள் உங்களுக்காக….
- இரவு பகல் பார்க்காமல் வாரத்தின் ஏழு நாட்களும் உழைத்தால்தான் தொழிலில் வெற்றியடையமுடியும் என்று நம்பாதீர்கள்.ஞாயிற்றுக்கிழமைகளை உங்கள் குடும்பத்தினருக்காக ஒதுக்குங்கள்.அவசரம் என்றால் தவிர, தொழில் சார்ந்த எந்த வேலையையும் ஞாயிற்றுக்கிழமைகளில் செய்யாதீர்கள்.
- நீங்கள் உற்சாகத்துடன் உழைப்பதற்குத் தேவையான உந்துசக்தியை உங்கள் குடும்பத்தினரிடமிருந்தே பெறுவதற்கு முயற்சி செய்யுங்கள். உங்கள் தொழில் குறித்து மனைவி, குழந்தைகளிடம் மனம்விட்டுப் பேசுங்கள். அப்போதுதான் நீங்கள் உங்கள் குடும்பத்தினரிடம் வைத்திருக்கும் அன்பு மற்றும் மரியாதையை உங்கள் குடும்பத்தினர் புரிந்துகொள்வர். உங்களுக்குத் தேவையான ஊக்கத்தை, உற்சாகத்தை அவர்கள் வழங்குவர்.
- வீடு மற்றும் உங்கள் அலுவலகம் இரண்டுக்கும் இடையில் அதிக தொலைவு இருக்கக் கூடாது.அப்போதுதான் பயண நேரத்தை கணிசமாகக் குறைக்க முடியும்.இதன் மூலம் மிச்சமாகக் கிடைக்கின்ற நேரத்தை குடும்பத்துடன் செலவிட முடியும். நேரம் கிடைக்கிறபோது,அலுவலகத்திலிருந்து,டக்கென்று வீட்டுக்கு வந்து மதிய உணவை குடும்பத்தோடு சாப்பிடுவது போன்ற பல நன்மைகள்,வீடும் அலுவலகமும் பக்கத்தில் இருக்கின்றபோது கிடைக்கும்.
- எவ்வளவுதான் வேலைகள் கழுத்தை நெரித்தாலும் உங்கள் வாழ்க்கைத் துணையிடம் அன்புகாட்டத் தவறாதீர்கள். வார இறுதி நாட்களில் மனைவியுடன்/கணவருடன் வெளியில் செல்லுங்கள். இல்லற வாழ்க்கை சிறப்பாக அமையும்போது அது தரும் உற்சாகம் உங்கள் தொழிலிலும் பிரதிபலிக்கும்.
- வீட்டையும்,வேலையையும் ஒன்றோடொன்று குழப்பிக்கொள்ளக் கூடாது என்பதெல்லாம் பழைய சித்தாந்தம். தொழிலில் லாபம் வந்தால் அல்லது தொழிலில்ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் இரண்டையுமே குடும்பத்தினரிடம் சொல்ல மறக்காதீர்கள். அவர்கள் தான் உங்களது உண்மையான சியர் லீடர்கள். உங்களை துன்பத்திலிருந்து மீட்டெடுக்க, அல்லது உங்களது மகிழ்ச்சியில் பங்கெடுக்க அவர்கள்தான் சரியான தேர்வு!
- அலுவலக வேலையை வீட்டில் செய்கிறீர்களா? எல்லோரும் இரவு தூங்கியதும் வேலை பாருங்கள். அல்லது எல்லோரும் காலையில் விழிக்கும் முன் உங்கள் வேலைகளை முடியுங்கள். ப்போதுதான் எப்போது பார்த்தாலும் வேலை வேலை என்று நீங்கள் இருப்பது போன்ற உணர்வு உங்கள் குடும்பத்திற்கு வராது. அவர்கள் விழித்ததும் அவர்களோடு உங்கள் நேரத்தை நீங்கள் செலவிடலாம். என்ன ஒன்று, இதற்காக உங்கள் தூக்கத்தை கொஞ்சம் துறக்க நேரிடும்.அவ்வளவுதான்.
- அதேபோல,உங்கள் குழந்தைகள் விடுமுறையில் வீட்டில் இருந்தால், அதிகாலை நேரத்தில் அலுவலகத்துக்குச் சென்று வேலைகளை முடித்துவிட்டு, பகல் நேரத்தில் உங்கள் குழந்தைகளோடு நேரத்தை செலவிடலாம்.
- மிக மிக முக்கியமான விஷயம் ஒன்றிருக்கிறது.உங்களது தொழில் சார்ந்த வேலைகளையும் நீங்கள் ஒருவர் மட்டுமே பார்க்கவேண்டும் என்று பிடிவாதம் பிடிக்காதீர்கள்.வேலைகளை திறமையுள்ள ஊழியர்களிடம் பிரித்துக் கொடுங்கள்.அதன் மூலம் உங்களுக்கு கொஞ்சம் நேரம் கிடைக்கும்.இதை உங்கள் குடும்பத்தினருடன் செலவழிக்கலாம்.
- அதேபோல,நீங்கள் வீட்டில் இருக்கும்பொழுது,உங்கள் மனைவி அல்லது குழந்தை ஏதேனும் உங்களிடம் முக்கியமாகப் பேச வந்தால் “நான் வேற ஒரு யோசனையில் இருக்கேன். தொந்தரவு பண்ணாத..” என்றுமுகத்திலடிக்காதீர்கள்.அவர்களின் பிரச்சனைகளைக் காது கொடுத்துக் கேளுங்கள். குடும்ப வாழ்க்கை விரிசலடைய ஆரம்பிப்பது இந்த இடத்தில் இருந்துதான்.குடும்பம் இல்லாமல் வெறும் வெற்றியை மட்டும் வைத்துக்கொண்டு நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?
- கடைசியாக உங்களது,உணவுமுறை, உடல் நலம் இரண்டிலும் கவனம் செலுத்துங்கள். ஆரோக்கியமான உணவும்,உடலும்,மனதை அமைதியாக வைக்கும். இதனால்,தொழில்- குடும்பம் இரண்டிலும் நீங்கள் உங்கள் எரிச்சலை, சிடுசிடுப்பைக் காட்டமாட்டீர்கள்.
-சு.கவிதா