வருங்காலப் பொது வைப்பு நிதி….நடுத்தரக் குடும்பங்களின் ஆகப்பெரிய சேமிப்பு இதுவாகத்தான் இருக்க முடியும். ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட ஒரு தொகை ஊழியர்களின் சம்பளத்திலிருந்து பிடிக்கப்படும்.
மற்றுமொரு குறிப்பிட்ட தொகையை நிறுவனம் ஊழியர்களுக்காக வழங்கும். இந்தக் கூட்டுத்தொகை, தொழிலாளர் வருங்கால வைப்புநிதி நிறுவனத்தின் கணக்கில் செலுத்துவர். மத்திய அரசு ஆண்டுதோறும் முடிவு செய்யும் வட்டியை அந்நிறுவனம் வழங்கும்.
திருமணம்,மேற்படிப்பு,வீடு கட்டுதல்/வாங்குதல் போன்ற மிக முக்கியத் தேவைகளுக்காக மட்டுமே இத்தொகையைக் கடனாக எடுக்க இயலும். அதனை குறித்த காலத்துக்குள் திரும்பச் செலுத்திவிடவேண்டும்.
வருங்காலம் சிக்கலானதாக ஆகிவிடக்கூடாது என்பதுதான் இந்த நடைமுறையின் நோக்கம். இப்படி நம்முடைய வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்துவிட்டது இந்தப் பொதுவைப்பு நிதி.
ஆனால் சில சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், புதிதாகத் தொழில் தொடங்கிய ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கான வைப்புநிதியை சரிவர வைப்புநிதி அலுவலகத்தில் கட்டுவதில்லை என்கிற புகார்களும் ஆங்காங்கே எழுந்துவருகின்றன.
ஒவ்வொரு மாதமும் ஊழியர்களுக்குக் கொடுக்கப்படும் சம்பள ரசீதில் வைப்பு நிதி எவ்வளவு பிடிக்கப்பட்டிருக்கிறது என்கிற தகவல் இருக்கும். ஆனால் மேற்கண்ட சில நிறுவனங்களைப்பொறுத்தவரை அந்தப் பணம் உண்மையிலேயே வைப்பு நிதிக் கணக்கில் சேர்ந்திருக்காது. திட்டமிட்டோ, இயல்பாகவோ அது நிகழ்ந்துவிடும். ஆனால் இதனால் கடுமையாகப் பாதிக்கப்படுவோர் தொழிலாளர்கள்தாம்.
இவ்வாறு பாதிக்கப்படுவோர் தொழிலாளர் நீதிமன்றம், உயர்நீதிமன்றம், காவல் துறை ஆகியவற்றை அணுகி நிவாரணம் தேட முனைகின்றனர்.
இந்தப் பிரச்னைகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நம்முடைய வைப்புநிதிக் கணக்கில் அந்தந்த மாதம் பணம் சரியாகச் சென்று சேர்கிறது என்பதைக் குறுஞ்செய்தி ,மற்றும் மின்னஞ்சல் மூலமாக நாம் பதிவு செய்து வைத்திருக்கும் தொலைபேசி எண்ணுக்கு வைப்புநிதி அலுவலகம் செய்தி அனுப்புகிறது.
இதன் அடுத்தகட்டமாக வருங்கால வைப்பு நிதியை நிறுவனங்கள் கட்டாத பட்சத்தில் அதுகுறித்த தகவல்களை நிறுவனங்களுக்குச் சொல்ல வருங்கால வைப்பு நிதி ஆணையம் முடிவு செய்துள்ளது.
தங்களது ஊழியர்களின் சந்தா தொகையை குறிப்பிட்ட தேதிக்குள் கட்டத் தவறினால் அவர்களுக்கு குறுஞ்செய்தி வழியாகவோ அல்லது மின்னஞ்சல் வழியாகவோ நினைவூட்டல் தகவல் அனுப்பப்படும் என்றும் வருங்கால வைப்பு நிதி ஆணையம் கூறியுள்ளது.
இதன் மூலம் அதிகபட்ச வெளிப்படைத்தன்மை கடைபிடிக்கப்படும் என்றும் வைப்புநிதி ஆணையம் தெரிவித்துள்ளது.
வாழ்நாள் முழுவதும் கடுமையாக உழைத்து சம்பாதித்து, எதிர்காலத்துக்காக ஊழியர்கள் சேமிக்கும் சொற்பத்தொகைதான் வருங்கால வைப்புநிதி. அதில் தொழில் முனைவோர் எந்தவிதமான அசட்டைக்கும் இடம் கொடுத்துவிடக்கூடாது.
-பாலாஜி.