கூகிளின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர்பிச்சைக்கு அடித்த சூப்பர் லாட்டரி பற்றித்தான் உலகெங்கும் மூக்கில் விரல்வைத்தபடி பேசிக்கொண்டிருக்கின்றனர். லாட்டரி என்றால் அங்கு உழைப்புக்கு வேலை இல்லை அல்லவா! ஆனால் சுந்தர் பிச்சைக்கு கிடைத்தது அதிர்ஷ்டத் தொகை அல்ல. அங்கீகாரத்தொகை. உழைப்புக்கான அங்கீகாரம் அது.
கூகிளின் தலைமைப் பொறுப்பை ஏற்றுகொள்வதற்கு முன்னால் அதாவது மூன்று வருடங்களுக்கு முன்னால் கூகிள் குடும்பத்திலிருந்து வந்த மற்றுமொரு நிறுவனமான “அல்பபெட்”(ALPHABET INC.,) என்கிற நிறுவனத்தில் மிக முக்கியப் பொறுப்பில் இருந்திருக்கிறார் சுந்தர் பிச்சை.
அந்த சமயத்தில் சுந்தர்பிச்சை தன்னுடைய சிறப்பான செயல்பாடுகளினாலும் உழைப்பினாலும் கூகிள் குடும்பத்தின் இதயத்தைக் கவர “இந்தப் பையனுக்கு சிறப்பான எதிர்காலம் இருக்கிறது.
நிச்சயம் தலைமைப் பதவியைப் பிடிப்பார்” என்று கணித்து, தனது நிறுவனத்தின் குறிப்பிட்ட பங்குகளை (SHARES)சுந்தர்பிச்சைக்கு வெகுமதியாக அளித்தது கூகிள் நிறுவனம்.
அவர்கள் நினைத்ததுபோலவே சுந்தர்பிச்சை தனது திறமையால்,கடும் உழைப்பால் மேலே மேலே முன்னேறி இன்று கூகிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக உயர்ந்து நிற்கிறார். கூகிள் நிறுவனத்தின் அனைத்து முடிவுகளையும் எடுக்கும் சர்வ வல்லமை பொருந்திய அதிகாரம் அவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
அதுமட்டுமல்ல இவர் தலைமைப் பொறுப்பை எற்றுக்கொண்டதற்குப் பிறகு கூகிள் நல்ல லாபத்தைப் பார்த்து வருகிறது. இதனால் கூகிளின் பங்குகள் நல்ல விலையைப் பெற்றிருக்கின்றன.
இனிமேல் தான் இருக்கிறது செய்தியே…..மூன்று வருடங்களுக்கு முன்னால் சுந்தர்பிச்சைக்கு வெகுமதியாக நிறையப் பங்குகள் (3,53,939) கிடைத்தன என்று சொன்னோம் இல்லையா!
அந்தப் பங்குகளின் இன்றைய மதிப்பு எவ்வளவு தெரியுமா? ரூ.2524 கோடி. கூகிள் நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பு, பங்குச்சந்தையில் 29% உயர்வைக் கண்டிருப்பதே காரணம்.
கூகிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரிக்கான சம்பளத்தை தவிர சுந்தர் பிச்சைக்கு இன்றைய தேதிக்கு ரூ.2524 கோடிக்கான சொத்து ஷேர் வடிவில் நிற்கின்றது. “அடிச்சான் பாரு அப்பாயிண்ட்மென்ட் ஆர்டரை…..” என்பதுபோல உழைப்பின் பலனை கண்கூடக் கண்டிருக்கிறார் சுந்தர் பிச்சை.
பொறுமையான தொடர் உழைப்பு, திறமையை சரியான சமயத்தில் வெளிப்படுத்தும் சமயோசிதம் போன்றவற்றைக் கையாண்டு சுந்தர்பிச்சை என்கிற தமிழன் அடைந்திருக்கும் இந்த வெற்றி மற்ற தொழில்முனைவோருக்கு பெறும் நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது. அவரால் முடியும்போது நம்மாலும் முடியும் இல்லையா?
-பாலாஜி.