வெற்றியின் மறுபெயர் ‘அம்பானி

இந்தியாவின் தொழில் மும்மூர்த்திகள் என்று எடுத்துக் கொண்டால் கால வரிசையில் மூன்றாம் இடத்தில் (டாட்டா, பிர்லா  ஆகியோருக்கு அடுத்தபடியாக) இருப்பவர் யார் என்று கேட்டால்  நம்நாட்டின் கடைக்கோடி குடிமகன்கூட கூறிவிடுவான் ‘அம்பானி’ என்ற பெயரை.

 

சாதனைக்கு என்ன தேவை?

எந்தவிதமான குடும்பத் தொழில் பின்னணியும் இல்லாமல் உருவான அற்புதமான சாதனையாளர் தீருபாய் அம்பானி. எப்படிப்பட்ட நிலையில் இருந்தாலும், சாதாரணப் படிப்பறிவே பெற்றிருந்தாலும்கூட உழைக்கத் தயங்காத குணமும், செயல்படுத்தத் தளராத மனமும் இருந்தால் போதும்; தொழில் சக்ரவர்த்தியாக உருவெடுக்கமுடியும் என்ற நம்பிக்கையை இன்று வரை இளைஞர்களின் மனதில் ஏற்றிவிட்டவர் இவர்.

 

திரஜ்லால் ஹிராசந்த் அம்பானி என்ற பெரிய பெயர் உங்களுக்குத் தெரிந்திருக்காமல் இருந்தாலும், அந்தப் பெயரின் அம்பானி என்பது உலகமறிந்த பெயர். ரிலையன்ஸ் என்கிற தொழில் சாம்ராஜ்யத்தை நிர்மாணித்த சக்ரவர்த்தி அவர்தான்.

 

வெற்றிகளின் ராஜ்ஜியம்

மூன்று லட்ச ரூபாய் முதலீட்டில்தான் தொழிலைத் தொடங்கினார் அம்பானி. அதிலிருந்து பல லட்சம் கோடிகளை எட்டிப் பிடித்த சாகசம் அவருக்குக் கை வந்தது. ஏழை என்பதன் துன்ப இலக்கணங்களை சுவடு மாறாமல் அனுபவித்த அவருக்கு இவ்வளவு பணம் எப்படி சேர்ந்தது?

அவர் பெற்ற வெற்றிகளின் அடிப்படை ரகசியம் என்ன?

 

reliance logo

துன்பங்களிலும் தொடர்ந்த கனவுகள்

குஜராத் மாநிலத்தில் உள்ள சோர்வாட் என்கிற சிறிய கிராமத்தில் 1932ம் ஆண்டில் பிறந்தார் அம்பானி. அவருடைய  தந்தையார் ஓர் ஆசிரியர். அம்பானியுடன் பிறந்தவர்கள் மூன்று சகோதரர்கள், இரண்டு சகோதரிகள். பெரிய படிப்பும் இல்லை. பெரிய வசதியுமில்லை.

 

1935ம்  ஆண்டு தன்னுடைய 17ம் வயதில் அரேபிய வளைகுடாவில் இருந்த பிரிட்டிஷ் காலனியான ஏடன் தீவுக்கு, வேலைக்காகச் சென்றார். மாதச் சம்பளமோ ரூ.300தான். அந்த பர்மா ஷெல் கம்பெனியில் அம்பானியின் வேலை, கம்பெனியின் தந்திகளை அன்றாடம் அனுப்ப வேண்டும் என்பது மட்டுமே. அதற்கு அந்நிறுவனம் ரூ.5 ஆயிரம், 10 ஆயிரம் என்று செலவழித்துக் கொண்டிருந்தது.

 

கையில் காசே இல்லாத நிலையில்கூட ‘பர்மாஷெல்’ போன்ற கம்பெனியைத் தொடங்க வேண்டும் என்ற கனவுடன் உழைத்தான் அந்த இளைஞன். வலுப்பெற்ற அந்தக் கனவுடன் எட்டு ஆண்டுகள் சென்றதும் இந்தியாவுக்குத் திரும்பினான். அந்த ஆண்டு 1958. இந்திய தொழில் துறை வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஆண்டு அது.

 

விடா முயற்சியின் கனிகள்

மனைவி கோகிலா, கணவரின் ’வாழும் வித்தை’யைத் தெரிந்தவர். இந்த தம்பதிக்கு இரண்டு ஆண் குழந்தைகள். குடிசையில் வாழ்ந்தாலும் கோபுரம்தான் இலக்கு என்று யோசிப்பவர் அம்பானி. நண்பர்களை அணுகி, ரூ.15 ஆயிரத்தைக் கடனாக வாங்கினார் அம்பானி. முதலீடு கிடைத்துவிட்டது.

continues effort

உடனே, ’ரிலையன்ஸ் கமர்ஷியல் கார்ப்பரேஷன்’ என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். ஏற்கனவே அவர் வேலை செய்து கொண்டிருந்த தொடர்புகளைக் கொண்டு மஞ்சள், முந்திரி, ஏலக்காய், இஞ்சி போன்றவற்றை ஏடனுக்குத் தொடர்ந்து ஏற்றுமதி செய்துவந்தார்.

 

அதன்பிறகு மெல்ல மெல்ல வாழ்வின் ஏணிப்படிகளில் உறுதியான அடி வைத்து உயரத் தொடங்கினார்.

 

சிங்கநடை போட்டு சிகரத்தில் ஏறு!

அடுத்து அவர் ரூ.1.5 லட்சம் முதலீட்டில் ரிலையன்ஸ் டெக்டைல்ஸ் என்றா  நிறுவனத்தைத் தொடங்கினார். அடுத்து ரேயான், நைலான் துணி வர்த்தகம், அதன்பின் ‘விமல்’ பிரிண்டில் துணி ரகரங்களின் தயாரிப்பு என அடுத்தடுத்த கட்டங்களுக்குச் சென்று கொண்டிருந்தார்.

 

விமல் என்பது அம்பானிக்குத் துணையாக தொழிலில் இருந்துவந்த மணிக்லாலின் மகன்பெயர். விமல் பிராண்டுகள் மக்களிடையே பெரிய வரவேற்பைப் பெறவும் நாடெங்கும் விமல் துணிக்கடைகள் திறக்கப்பட்டன. அதன் விளம்பரத்துக்காக முன்னுரிமை, முயற்சி, பணம் ஆகியவை தாராளமாக வாரி வழங்கப்பட்டன. விற்பனையும் லாபமும் கூடிக் கொண்டே இருந்தது.

 

அம்பானி தன்னுடைய தொழில் சாம்ராஜ்யத்தை விரிவாக்க விரும்பி பல்வேறு உரிமங்களைப் பெற்றார். தொழில் வளர்ச்சிக்கான ஆலோசனை வழங்க, திட்டங்களை நடைமுறைப்படுத்த என்று  திறமையான வல்லுநர்கள், நிர்வாகிகளைத் தேடிப்பிடித்து பணியில் அமர்த்தினார்.

 

வெற்றிக்கு முடிவு உண்டா?

“லைசென்ஸ் வாங்கிவிட்டீர்கள். இனி தொழிலில் வெற்றி ஓட்டம்தானே! ” என்று நண்பர் அவரிடம் கேட்ட போது அம்பானி அவரிடம் சொன்னது இது:

 

“அரசாங்கம் தொழிற்சாலை நடத்த ஒரு காகிதத்தில் லைசென்ஸ் கொடுத்து விட்டால், அப்புறம் நாம் செயல்படாமல் இருந்துவிட முடியுமா? 98% உழைப்பை வழங்கினால்தான் தொழிலில் வெற்றி உருவாகும். அத்தோடு நின்றுவிட முடியுமா? தொடர் வெற்றி என்பது நிற்காத உழைப்பால்தான் சாத்தியமாகும்” என்றார்.

 

கேள்வி கேட்ட நண்பர் மூக்கில் விரல் வைக்காத குறை!

 

சொன்னதோடு மட்டுமல்லாமல், சொன்னதைச் செய்தும் காட்டினார் அம்பானி. அது, வெற்றிக்குப் பின்னரும் வேகமான செயல்பாடு ஏன் தேவை என்று இளைஞர்களுக்கு இன்றளவும் புரிய வைக்கிறது.

 

தொழில் சாம்ராஜ்ய வளர்ச்சிக்குத் தேவையான அரசு உரிமங்கள், ஆணைகள், சலுகைகள் ஆகியவற்றைப்பெற, அவர் மேற்கொண்ட  அணுகுமுறைகளைக் குறித்து பல விமர்சனங்கள் உண்டு. ஆனால் அவற்றைப் பெரிதாக அம்பானி கண்டுகொள்ளவில்லை.

 

மேலும் தன்மீதான விமர்சனங்களை ஒப்புக்கொண்டு அவர் சொன்னது இதுதான்:

“எந்தவித அகந்தையும் இல்லாமல் சலாம் அடித்தே காரியங்களை முடித்துக் கொள்வேன். என்னுடைய தொழில் கொள்கை இதுதான்” என்றார்.

 

‘எதையும் பெரியதாக நினைக்க வேண்டும். அதையும் முன்கூட்டியே நினைக்க வேண்டும்’ என்பார் அடிக்கடி. அதேபோல, தான் கூறியவற்றை நடைமுறையில் பின்பற்றி வெற்றிகளையும் குவித்தார்.

 

”எனது வெற்றியே எனக்கு எதிரி”

எல்லாக் குடும்பங்களிலும் ஏற்படுகிற பிரச்சனை, அம்பானி குடும்பத்திலும் ஏற்பட்டது. அம்பானி வாழ்ந்த காலத்திலேயே அவருடைய இளைய மகன் அனில் அம்பானிக்கும், அவரின் ஒன்றுவிட்ட சகோதரர் ரம்னிக் லாலுக்கும் ஒத்துப் போகவில்லை. இது ஒருபுறமிருக்க, பாம்பேடையிங் சேர்மன் வாடியாவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

ராம்நாத் கோயங்கா
ராம்நாத் கோயங்கா

இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆசிரியர் கோயங்கா, அம்பானிக்கு எதிரியானார். பத்திரிகைகளில் அம்பானியை விமர்சித்துக் காட்டமாக எழுதினார் கோயங்கா.

 

அப்போது அம்பானி என்ன சொன்னார் தெரியுமா?

 

“இராம்நாத் கோயங்கா என்னுடைய விரோதி இல்லை. என்னுடைய வெற்றியே எனக்கு விரோதியாக இருக்கிறது. பலர் முயன்று சிலர் மட்டுமே வெற்றியை அடைகிற சூழ்நிலையில், என்னைப் போன்றவர்களின் வெற்றி பொறாமையைத் தூண்டிவிடுகிறது” என்றார்.

 

உடலோடும் போராட்டம்

பிணியும் மூப்பும் 1986ம் ஆண்டில் அம்பானியைச் சந்தித்தன. பக்க வாதம் அவரைப் படுக்கையில் கிடத்திப் போட்டது. 54 வயதில் தாக்கிய அந்தத் தாக்குதல் 69 வயதில் அவர் மரணம் அடையும்வரை தொடர்ந்தது. இறுதியில் 2002ம் ஆண்டில் மறைந்தார் அம்பானி.

 

அவரது மறைவுக்குப்பின் அவருடைய குடும்பத்தில் வாரிசு சண்டை முகேஷ் அம்பானி, அனில் அம்பானி இருவருக்கும் இடையே நடந்தது. தாயாரின் சமாதானம் ரிலையன்ஸ் இன்றுவரை இரு நிறுவனங்களாகப் பிரித்து நிலைக்க வைத்திருக்கிறது.

 

”இப்படியே இருவரும்  ஒற்றுமையில்

தனது மகன்கள் முகேஷ், அனிலுடன் அம்பானி. (புகைப்படம்: நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ்)
தனது மகன்கள் முகேஷ், அனிலுடன் அம்பானி. (புகைப்படம்: நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ்)

லாமல் அடித்துக்கொண்டிருந்தால் அப்புறம் உங்கள் கணக்குவழக்குகளைச் சோதனையிட வேண்டியிருக்கும்” என்று அன்றைய நிதியமைச்சர் செல்லமாக இவர்களைக் கடிந்துகொண்டதும் வரலாறுதான்.

 

தொடங்கிய காலம் முதல் இன்றுவரை ரிலையன்ஸ் நிறுவனமும் அம்பானியும் சந்திக்காத விமர்சனங்களே இல்லை எனலாம்.

 

ஆனால் எது எப்படி இருந்தாலும் ’அம்பானி’ என்கிற அந்தச் சொல் கடும் உழைப்புக்கான எடுத்துக்காட்டாக, ஒரு மந்திரச் சொல்லாக இளைஞர்களுக்குள் தொடர்ந்து ஒலிக்கிறது.

 

தஞ்சை என்.ஜே.கந்தமாறன்

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *