கம்பெனி செகரடரிஷிப் எனப்படும் படிப்பு, வணிகவியலை அடிப்படையாகக்கொண்ட தொழிற்படிப்பு ஆகும். இப்படிப்பில் எகிசிகியூடிவ், புரொபஷனல் ஆகிய இருநிலைகளை வெற்றிகரமாகக் கடந்தோர், உரிமம் பெற்று இந்தியாவெங்கும் தொழில் செய்யலாம்.
பட்டயக் கணக்காயர் (chartered Accountant), அடக்கவிலைக் கணக்காளர் (Cost Acccountant) போல இதுவும் தனித்த ஒரு தொழில் படிப்பு ஆகும். இதன் தென்னிந்த தலைமையகம் சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ளது.
இவ்வமைப்பு, கடந்த ஜூன் மாதத்தில் நடத்திய தேர்வுக்கான முடிவுகளை அறிவித்துள்ளது. (முழு விபரங்களையும் மதிப்பெண்களையும் www.icsi.edu என்ற இணையதளத்தில் அவ்வமைப்பு வெளியிட்டுள்ளது.
எக்சிகியூடிவ் படிப்பில் மாட்யூல் 1 பிரிவில் (பழைய பாடத்திட்டம்) 11.51% மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாட்யூல் 2 ல் 16.78% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். புதிய பாடத்திட்டத்தின்படி தேர்வு எழுதியோரில் இது முறையே 10.22% மற்றும் 8.60% ஆகும்.
புரொபஷனல் படிப்பில் (பழைய பாடத்திட்டம்) மாட்யூல் 1 பிரிவில் 27.13% பேரும், மாட்யூல் 2 பிரிவில் 33.34% பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர். அதே படிப்புக்கான புதிய பாடத்திட்ட தேர்வில் மாட்யூல் 1 பிரிவில் 27.82% பேரும், மாட்யூல் 2ல் 24.73% பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
எக்சிகியூடிவ் தேர்வில் தேசிய அளவில் (பழைய பாடத்திட்டத்தில்) குஷி அகர்வால் என்பவர் (ஆஜ்மீர் தேர்வு மையம்) முதலிடம் பிடித்துள்ளார். புதிய பாடத்திட்டப்படி நடத்தப்பட்ட தேர்வில் நாட்டிலேயே முதலிடத்தை கோவையைச் சேர்ந்த ஆர்.கோகுல் பிடித்துள்ளார். இது தமிழகத்துக்கு மிகவும் மகிழ்ச்சி தரத்தக்க செய்தி ஆகும்.
புரபஷனல் தேர்வில் (பழைய பாடத்திட்டம்) கான்பூர் மையத்தில் தேர்வு எழுதிய தன்யா கத்தூரியா நாட்டிலேயே முதலிடத்தைப் பெற்றிருக்கிறார். புதிய பாடத்திட்டத்தில் கிருதி கண்டேல்வால் நாட்டில் முதலிடம் பிடித்திருக்கிறார்.
இந்த தகவலை நிறுமச் செயலர் கல்வி மையம் வெளியிட்டுள்ளது.
–தூரிகை.